இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு..

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்ச்சியடைய வைத்ததுதான், கொரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருவதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கொரோனா வைரஸை தடுப்பதில் மத்திய அரசின் செயல்பாடு, வேலையின்மை ஆகியவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் “கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா திட்டமி்ட்டு போர் புரிந்து வருகிறது” எனப் பேசியிருந்தார். இதற்கு பதில் அளி்க்கும் விதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “கொரோனா வைரஸுக்கு எதிராக மோடி அரசு நன்கு திட்டமிட்டு போர் புரிந்து, தேசத்தின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு 24 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி, 12 கோடி வேலையிழப்புகள், 15.5 லட்சம் கோடி கூடுதல் வாராக்கடன், உலகிலேயே அதிகமாக நாள்தோறும் கொரோனாவில் பாதிப்பு என்று இருக்கிறது. ஆனால் மத்திய அரசும், ஊடகங்களும் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கின்றன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.