டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து பும்ரா விலகல் : பிசிசிஐ அறிவிப்பு..

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை.

முதுகு வலி காரணமாக அவர், களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. முதுகு வலியின் தீவிரத் தன்மையை அறிந்து கொள்ள பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார் பும்ரா. முதுகு வலி பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும் அதில் இருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும் எனக் கூறப்பட்டுவருகிறது.

என்றாலும், பும்ரா விலகுவது இதுநாள் வரை அதிகாரபூர்வமாக பிசிசிஐ அறிவிக்கவில்லை. மாறாக, கங்குலி, பும்ரா விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பேசிவந்தார். ஆனால், பும்ராவின் விலகல் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, “டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு நீக்கியுள்ளது. மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பும்ராவுக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.