ஜனநாயகத்தைக் காக்க 20 தொகுதிகளிலும் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில், காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்ளைச் சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:

எதிர் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கும், அல்லது நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்றத் தேர்தல் வந்தால் எப்படி தி.மு.கழகத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும், தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் இந்தக் கூட்டத்திலே விவாதித்து இருக்கிறோம். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நியமிக்கப்பட்டு இருக்கக்கூடிய பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களோடு இணைந்து எப்படித் தேர்தல் பணியை முடுக்கி விடுவதற்கு நீங்கள் ஈடுபட வேண்டும் என்பதைப் பற்றி அவர்களிடத்திலே தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம் அந்தவகையில் இந்தக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

செய்தியாளர்: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு செல்லும் என்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கும் தடையில்லை என்று கூறியிருப்பது பற்றி உங்களின் கருத்து?

மு.க.ஸ்டாலின்: தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையிலே ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தினுடைய நெறிமுறைகள் போற்றிட வேண்டும் என்பது தான் தி.மு.கழகத்தினுடைய கொள்கை. சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இன்று வெளிவந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பை பொறுத்தவரையிலே, அ.தி.மு.கவின் ஒரு அணிக்கு சாதகமா? இன்னொரு அணிக்கு பாதகமா? என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. எனவே, அதுபற்றி தி.மு.கழகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலையில் அந்த இரண்டு தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே 18 தொகுதிகளும் மக்கள் பிரதிநிதி இல்லாத சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, 18-ம் ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த 2 தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் அந்த தேர்தலைப் பொறுத்த வரையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மக்கள் தி.மு.கழகத்திற்கு பெருவாரியான வகையில் ஆதரவு தர தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மு.க.ஸ்டாலின்: 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து தான், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையா?

மு.க.ஸ்டாலின் : நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படவும் இல்லை, எந்த நேரத்திலும் மக்களை சந்திப்பதற்கு தி.மு.கழகம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.