7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரம்: அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்: மு.க.ஸ்டாலின்..

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என திமுக தலைவர் மு.க..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநுால் பதிவில்,

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.

மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும்.

ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருக்கிறது.

எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!