சட்டப்பேரவைத் தேர்தல் : சேலத்தில் 28ந்தேதி மு.க.ஸ்டாலின்-ராகுல் காந்தி ஒரே மேடையில் பரப்புரை..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது.. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் கூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்த்தி வருகின்றனர்.
சேலத்தில் வரும் 28-ந் தேதி ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம், சீலன்நாயக்கன்பட்டியில் ஞாயிற்றுகிழமை (28-ந் தேதி) மாலை 4 மணிக்கு இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முருகவேல் ராஜன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதால் தமிழக தேர்தல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.