சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருடன் கைக்கோர்க்கும் அதிநவீன ரோபோ..!

சென்னை மாநகர போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் துறையுடன் அதிநவீன ரோபோ இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவல் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், ரோபோ தயாரித்த எஸ் பி ரோபோடிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களும், பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ எவ்வாறு செயல்படும் என காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த ரோபோ மூலமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்து விதிகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.