எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

ஏ சைல்டு ஈஸ் த ஃபாதர் ஆஃப் மேன் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த். அது எத்தனை பெரிய உண்மை என்பது குழந்தை வளர்க்கும் பெற்றோருக்குப் புரியும். ஒருகாலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண நிகழ்வாக இருந்துவந்தது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதாரம் பிரச்சினையில்லை. விவசாயமோ அரசுப் பணியோ தொழிலோ கைகொடுத்தது. வீட்டு வேலை பார்ப்பதற்கென்றே எந்த வேலைக்கும் செல்லாத கடைக்குட்டி குழந்தைகள் இருந்தார்கள்.

இன்றைய நிலை உங்களுக்குத் தெரியும்.

வேலை தேடி நகரங்கள், பெருநகரங்களைத் தேடி மக்கள் படையெடுக்கும் காலம் வந்தது. நகரங்கள் மாநகரங்களாக மாறிப்போயின. கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாக நியூக்ளியர் குடும்பமாக மாறிவிட்டது.

மூன்று குழந்தைகள் இரண்டாகி ஒரு குழந்தையைக் கொண்ட பெற்றோர்கள் அதிகரித்துவிட்டார்கள். இரண்டு குழந்தைகளுக்கு இடையில் வளர்ப்பில் ஜெனரேஷன் கேப் உருவானது.  குழந்தைகள் வளர்ப்பு என்பது பாட்டிமார்களின் அனுபவத்துடன் இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

நவீன காலத்தில் குழந்தை பெற்றோம் வளர்த்தோம் என்பது எதார்த்தமல்ல. அறிவியல் முறை. திட்டம். நிரல் வகுத்து செய்யவேண்டியது. இரவுபகலாக வேலைபார்க்கத் தொடங்கிவிட்ட பெண்களுக்கு குழந்தை பிறப்பு என்பதும் வளர்ப்பது என்பதும் ஒரு அரேஞ்ச்மெண்ட். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம், யார் வளர்ப்பார்கள் என்பதெல்லாம் திட்டமிடவேண்டியுள்ளது.

குழந்தையே இல்லை என்றாலும், அதற்காக ஆயிரம் ஆயிரமாக கொட்டிக்கொடுத்து மருத்துவச் சிகிச்சைக்குத் தயாராகவேண்டியுள்ளது. எல்லாமே திட்டமிடல். எதுவுமே இயல்பாக நடப்பதில்லை. இயற்கையாக நடக்கவேண்டியது என்ற ஆதங்கக்குரல் கேட்கிறது.

ஒரு குழந்தையைப் பெற்றவர்கள் படும் சிரமும் புரிகிறது. அவர்கள் அடம்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எதற்கும் கோபித்துக்கொள்வார்கள்.

குழந்தை பெற்றால்தானே… குழந்தையே வேண்டாம் என்று தள்ளிப்போடுகிற நிலையை நினைத்துப்பாருங்கள். தெருவுக்குத் தெரு பெர்ட்டிலிட்டி சென்டர்கள் வெளிச்சம் காட்டுகின்றன. கூட்டமும் அலைமோதுகிறது. காலத்தின் கோலம்.

குழந்தைகள் வளர்ப்பில் எத்தனையோ நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

ஒரு குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்கள் என்ன? எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ளக்கூடாது, குழந்தை பிறப்பை ஏன் தள்ளிப்போடக்கூடாது என்பது பற்றியெல்லாம் அடுத்தடுத்து தொடரில் பேசப்போகிறேன்.

எப்போது குழந்தைகளை அடுத்தவர்களிடம் கொடுக்கலாம். யாரிடம் கொடுக்கக்கூடாது, பெற்றோர்களின் கடமைகள் என்ன, என்னவகையான உணர்வுகளை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் பேசப்போகிறேன்.

ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது என்ன, உண்மையான வளர்ச்சி என்பது என்ன., வளர்ச்சி என்றால் எதெல்லாம் வளர்ச்சி என்பவை எல்லாம் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அம்சங்கள்.

எப்போது ஒரு குழந்தை நல்ல குழந்தையாக மாறுகிறது. குழந்தை நன்றாக இருப்பதற்கும், கெட்டுப்போவதற்கும் யார் காரணம், நாம் தவறுகள் நடந்த பிறகுதான் யோசிப்பவர்களாக இருக்கிறோம்.

எமோஷனல் சேப்டி என்பது என்ன, எது உண்மையான சந்தோசம், நெகட்டிவ் பேரண்டிங் என்பது என்ன என்பது பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகள், பெற்றோரின் நடத்தைகள், அணுகுமுறைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் பார்ப்போம்.

இவற்றையெல்லாம் அறியும் போது எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் என்பதை புரிந்துகொள்வோம்.

தொடரும்… 

Entha Kuzhanthaiyum Nalla Kuzhanthaithan 1