பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளருமான குல்தீப் நய்யார் மரணம்


மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின் பஞ்சாப் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு பிறந்தார். பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார்.

நெருக்கடி நிலையின்போது முதன் முதலில் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் குல்தீப் நய்யார். அரசியல் விமர்சகராக பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்து வந்தார். மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஐ.நா சபையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். நேருவுக்குப் பிறகு இந்தியா போன்றவை இவரது புகழ்பெற்ற புத்தகங்கள். எல்லைகளுக்கு இடையே என்ற இவரது சுய சரிதை மிகவும் பிரபல புத்தகம். இந்திய – பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.