பொய்யும், புரட்டும்’ பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல : மு.க.ஸ்டாலின்..

“அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் நாணமின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!”

– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொறுப்புமிக்க உயர்ந்த பதவியைத் தாழ்ந்த வழியில், பொட்டுப் பூச்சியைப் போலவும் புன்மைத் தேரையைப் போலவும் தரையில் விழுந்து கைகளையும் கால்களாகப் பாவித்துத் தவழ்ந்து ஊர்ந்து சென்று, கைகட்டி வாய்பொத்தி, அடைந்த காரணத்தாலோ என்னவோ, ‘அநாகரிமாக’வும் அழுக்கு எண்ணத்தோடும் பேசுவதோடு மட்டுமின்றி, ‘அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை’ அவிழ்த்துக் கொட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி, அரசு விழாக்களைச் சிறிதும் நாணமின்றிப் பயன்படுத்துவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்காசி புதிய மாவட்ட தொடக்கவிழாவில் பேசிய முதலமைச்சர், “பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஒரே நேரத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்கு பெற்றிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் முதலமைச்சர் திரு. பழனிசாமியும், அவரது துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வமும் பதவியேற்றதிலிருந்தே அ.தி.மு.க., ‘பா.ஜ.க.,வாக’ கலர் பூசிக் கொண்டதை மறைக்க மிகவும் சிரமப்பட்டு புதிய கதை ஒன்றை விட்டிருக்கிறார்.

‘புதிய மருத்துவக் கல்லூரிகள்’ என்கிறார். என்ன பயன்?

ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுத் தொகுப்பில் 5,530 மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போனதே!

இதுவரை முதலமைச்சர் ஏன் அதுபற்றி வாய் திறக்கவில்லை? தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குள் வரவே முடியாமல் இருந்த நீட் தேர்வை, அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சரால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?

‘உள்ளாட்சிக்கு மறைமுகத் தேர்தல்’ என்பதில் தன் அரசுக்கு ஏற்பட்ட ‘கொள்கை மாற்றம்’ என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார் திரு. பழனிசாமி. தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்ததும் கொள்கை மாற்றம்தான்! ‘2001-ல் என்னுடைய சென்னை மாநகர மேயர் தேர்தல் வெற்றி’யில் தொடங்கி, தமிழகத்தில் எங்கெல்லாம் தி.மு.க.,வினர் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தார்களோ அங்கெல்லாம் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தி உள்ளாட்சி நிர்வாகத்தையே அடியோடு நிர்மூலமாக்கியது அ.தி.மு.க. அரசு. அபத்தமான அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘மறைமுகத் தேர்தல்’ கொண்டு வரப்பட்டது. அதற்கு அவையில் நான் சொன்ன காரணத்தைத் தனது பதிலில் சுட்டிக்காட்டி தி.மு.க.,வின் கொள்கை மாற்றத்திற்கான நியாயத்தை தன்னையும் அறியாமல் விளக்கிய முதலமைச்சருக்கு நன்றி! எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் சீரழிக்கப்படும். அந்த சீரழிவிலிருந்து மீட்கத்தான் தி.மு.க.ஆட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் 2011ஆம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை தொடரும் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளின் நிலை என்ன?

2016-ல் இருந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. நீங்கள் சொல்வது போல் நடப்பது அ.தி.மு.க. ஆட்சிதானே! இந்த ஆட்சியில் ‘மேயர்களுக்கு நேரடித் தேர்தல்’ என்று முதலில் 2018ல் சட்டம்! பிறகு ‘நேரடித் தேர்தல்தான்’ என்று முதலமைச்சரே பேட்டி! ஆனால் ஒரே வாரத்தில் ‘மறைமுகத் தேர்தல்’ என்று அவசரச்சட்டம்! ஏன் இந்த குழப்பமும் குளறுபடியுமான கொள்கை மாற்றம்? உங்கள் ஆட்சியில், உங்களை உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட விடாமல் தடுத்தது யார்? இதுதான் தி.மு.க.,வின் கேள்வி.

‘மறைமுகத் தேர்தல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கவில்லை’ என்று துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் சொன்னார். அமைச்சரவையிலும் விவாதிக்காமல் இந்த முடிவு என்றால், உள்ளாட்சி ஊழலை மறைக்க – மறைமுகத் தேர்தலா? ஆகவே தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!

‘திடீர் அவசரச் சட்டம்’, ‘தேர்தல் ஆணையச் செயலாளர் மாற்றம்’, ‘வார்டு வரையறைகளில் குளறுபடி’, ‘பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வார்டு வரையறை செய்யாதது’ என்று அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் திரு. பழனிசாமி, தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும். தி.மு.க. மத்திய ஆட்சியில் இருந்த போது ‘தமிழகத்திற்கு எந்தத் திட்டத்தைத் தந்தார்கள்’ என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் வந்த திட்டங்களை நான் சட்டமன்றத்திலேயே பட்டியலிட்டுள்ளேன். மக்களைச் சந்திக்காத – மக்கள் நலனைக் காது கொடுத்துக் கேட்காத முதலமைச்சர், சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக் கூட கவனிப்பது இல்லை என்பது இப்போதுதான் நாட்டு மக்களுக்குத் தெரிகிறது. ஆகவே, தி.மு.க.,வின் திட்டங்களை அறிய முதலில் – சட்டமன்றப் பதிவேடுகளை எடுத்துப் படியுங்கள். அல்லது தற்போதுள்ள ஒவ்வொரு துறைச் செயலாளரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தியாவில் – ஏன் உலகத்திலேயே கூட ‘அடிமையாட்சி’ – ‘கொத்தடிமை ஆட்சி’ – ‘ஊழலாட்சி’ – ‘நிர்வாகத்திறமை இல்லாத ஆட்சி’ – ‘வெற்று அறிவிப்புகளை வெளியிடும் ஆட்சி’ என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு இந்த நூற்றாண்டில், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் தலைமையில் உள்ள ‘இரட்டைத் தலைமையின்’ ‘இரட்டை நாக்கு’ ஆட்சிதான் என்பதை நாட்டு மக்கள் நன்கு உணருவார்கள். உங்கள் அறியாமைக்கும் இயலாமைக்கும் தி.மு.க. மீது பழிபோடும் போக்கைக் கைவிட்டு, வகிக்கின்ற பொறுப்புக்கேற்ப, பொய்களைத் தவிர்த்து, இனியேனும் உண்மையைப் பேசுங்கள்! இதுதான் முதலமைச்சருக்கு இப்போது நான் முன்வைக்கும் வேண்டுகோள்!