முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் இருவரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கபட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று ரூ.110 கோடி நிரந்தர வைப்புத் தொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிரந்தர வாய்ப்பு தொகையை முடக்கிய நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வீடுகளில் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதி மிகப்பெரிய அளவில் சோதனை நடைபெற்றது. சுமார் 63 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கூட்டாளி நிறுவனமான கே.சி.பி. இன்ப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் லிமிடெட் ஆகிய நிறுவங்களின் சார்பில் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.110 கோடியை முடக்க லஞ்சஒழிப்புதுறை சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் இந்த நிறுவன உரிமையாளர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் என்பதால் இந்த தொகையை முடக்கம் செய்யவேண்டும் எனவும் கே.சி.பி. இன்ப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் லிமிடெட் என்ற நிறுவனம் முதலீடு செய்துள்ள அந்த நிரந்தர வைப்புத் தொகையை முடக்கம் செய்யவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் தொடர்பான விசாரணைக்கு இது உதவும் என்பதால் அதனை முடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த தொகைகள் அனைத்தும் 2017-க்கு பிறகு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதால், இந்த தொகையானது முன்னாள் அமைச்சர் அரசு ஒப்பந்தங்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தியதன் மூலம் கிடைக்கப்பட்டது என்றும் போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதி ஓம் பிரகாஷ் இந்த தொகையை முடக்கம் செய்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.