தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வுமையம்!

தென்தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்தில்  மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே 170 கி,மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்திலும், கேரளத்திலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், 60 முதல் 70 கி.மீ வேகத்துடன் காற்று வீசும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

கன்னியாகுமரியில் காலைமுதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

 

Heavy rainfalls in Southern Tamilnadu for next 24 hours