பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ் : தமிழக அரசு அறிவிப்பு…

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

2012-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்’ வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும், ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், ‘தினகரன்’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன,

மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’ தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.