காரைக்குடி நகராட்சி கூட்டம் : சொத்து வரி உயர்வு பற்றிய விவாதம் நடத்த வலியுறுத்தி கொட்டும் மழையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா..

காரைக்குடி நகராட்சி அதிமுக உறுப்பினர்கள் பிரகாஷ்,தேவன்,குருபாலு, அமுதா,ராதா, கனகவள்ளி,ராம்குமார் ஆகியோர் கொட்டும் மழையில் நகராட்சி அலுவலகம் முன்பாக சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி நகராட்சியின் சிறப்புக் கூட்டம் கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் லெட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி உயர்த்துவது சம்பந்தமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வரி உயர்வை எதிர்த்து கருப்பு உடை அணிந்து வந்தனர்.
விவாதம் நடைபெறாமல் கூட்டத்தை தலைவர் முடித்து விட்டதால் ஆவேசமடைந்த அதிமுக உறுப்பினர்கள் பிரகாஷ்,தேவன்,குருபாலு,அமுதா,ராதா,கனகவள்ளி,ராம்குமார் ஆகியோர் கொட்டும் மழையில் நகராட்சி அலுவலகம் முன்பாக சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அவர்கள் கூறுகையில்,தலைவர் உரை முடிந்து உறுப்பினர்கள் பேச முயலும்போது சுகாதார ஆய்வாளர் சுந்தர் குறுக்கிட்டு அரசு கொண்டு வந்துள்ள மஞ்சள்பை திட்டத்தை கூறி விழிப்புணர்வு பதாகையை தலைவர் மற்றும் துணை தலைவர் வெளியிட்டனர்.பிறகு ஆணையாளர் லெட்சுமணன் சிவகங்கையில் நடைபெற உள்ள அரசு புத்தக கண்காட்சிக்கு அழைப்பிதழ் வழங்கியதைப் பற்றி கூறினார்.
பிறகு விவாதம் தொடங்கும் என நினைத்தோம்.ஆனால் தலைவர் முத்துதுரை விவாதம் நடத்தாமலே தீர்மானங்கள் அனுமதிக்கப் பட்டதாக சொல்லி கூட்டத்தை முடிந்ததாக கூறி வெளியேறிவிட்டார்.
கூட்டம் ஆரம்பிக்கும்போது தமிழ்த்தாய் பாடலும் இறுதியில் தேசியகீதமும் பாடப்பட வேண்டும் என்பது நடைமுறை அதையும் கடைபிடிக்கவில்லை.
எனவே இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோம் என்றனர்.இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்