காரைக்குடியில் பள்ளி மாணவன் கடத்தல் தொலைக்காட்சி செய்தியால் பரபரப்பு : போலீஸ் விசாரணையில் நாடகம் அம்பலம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளி மாணவன் தன்னை வடமாநில இளைஞர்கள் கடத்தியதாக சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் மாணவனின் பேட்டியை ஒளிபரப்பின.

காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் தான் டியூசன் செல்லும் போது தலைகவசம் அணிந்த இருவர் தன்னை இருசக்கர வாகனத்தில் கடத்தி வாயில் துணியைக்கட்டி புறநகர் பகுதிவரை கொண்டு சென்றதாகவும் இருவரும் இந்தியில் பேசிக் கொண்டதாகவும் நான் சத்தம் போட்டவுடன் காரைக்குடி நகரின் முக்கியப் பகுதியில் தன்னை இறக்கி விட்டதாகவும் தெரிவித்தான்.

டியூசனுக்கு சென்ற மகனைக் காணவில்லை என்று மாணவனின் தகப்பனார் சுமார் 3 மணி நேரமாக தேடியுள்ளார். கடைசியாக காரைக்குடி பாண்டியன் திரையரங்கு அருகில் நின்ற மகனை கண்டு பிடித்து கேட்டதில் தான் கடத்தப்பட்ட விபரத்தை கூறியுள்ளான். மாணவனை அவரின் தந்தை காரைக்குடி வடக்குகாவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்தார்.

இதனிடையே மாணவன் வடமாநிலத்தவர்களால் கடத்தப்பட்டதாக சொன்ன செய்தியை சில தொலைக்காட்சிகள் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பின. இதனால் காரைக்குடி முழுவதும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டது.


காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் மாணவனுடன் தந்தை அளித்த புகாரின் பெயரில் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவன் கடத்தப்பட்டதாக சொன்ன இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது மாணவன் கடத்தப்படவில்லை என்பதை தெரிந்த காவல்துறையினர். மாணவனிடம் துருவி விசாரித்ததில் டியூசன் செல்லாமல் நண்பன் வீட்டில் விளையாடி விட்டு வந்தது தெரிந்தால் தந்தை தன்னை அடிப்பார் என நினைத்து பொய் சொல்லியதாக தெரிவித்தான்.

இது குறித்து காவல்துறை வெளியட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில்,

23.11.2023 ம்தேதி காரைக்குடி பள்ளிச்சிறுவன் வடஇந்தியர்களால் கடத்தப்பட்டதாக சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்ததில் சிறுவன் கடத்தப்பட்டது போன்ற காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை,0அதன் அடிப்படையில் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுவனை விசாரணை செய்யபட்டது. விசாரணையில் சிறுவன் டியூசனுக்கு செல்லாமல் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் அதனை பெற்றோரிடம் சொன்னால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால் பயந்துகொண்டு தன்னை அடையாளம் தெரியாத இந்தி பேசிய நபர்கள் கடத்தி சென்றதாக பெற்றோர்களிடம் பொய்யாக தெரிவித்ததாக சிறுவன் தெரிவித்தார்.

எனவே சிறுவனை யாரும் கடத்திச் செல்லவில்லை என்ற விபரம் தெரியவருகிறது. சிறுவனை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடத்திச்சென்றதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளின் உண்மைத் தன்மையை அறியாமல் செய்திகளை முந்தித்தரும் யுத்தத்தில் இத்தகைய செய்திகளை ஒளிபரப்புவது எத்தகைய அபாயகரமானது என்பதை இனியாவது உணரவேண்டும்.

இந்த செய்தியை காரைக்குடியில் பல பெற்றோர்கள் தங்கள் வாட்ஸ்ஆப்-பில் ஸ்டேடஸ் வைத்து நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.

7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனுக்கு இத்தகைய எண்ணம் தோன்றியிருப்பது ஆபத்தானது. பள்ளிகளில் இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளை கவனிக்க வேண்டும்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்