கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு…

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகார் தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சுரேந்திரன் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் கறுப்பர் கூட்டம் யூடியூப்பில் உள்ள வீடியோக்கள் அனைத்தையும் போலீசார் நீக்கினர்.

இதனைத்தொடர்ந்து செந்தில்வாசனையும் சுரேந்திரனையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் செந்தில் வாசனை மட்டும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், சென்னை மாநரக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில்வாசன் மீது குண்டர் பாய்ந்தது.

தற்போது சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுரேந்திரன் மனைவி கீர்த்திகா, செந்தில்வாசன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.