வியட்நாமில் அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் மீண்டும் சந்திப்பு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் இரண்டாவது முறையாக வியட்நாமில் சந்தித்துப் பேசினர்.

வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள மெட்ரோபோல் என்ற சொகுசு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான 2வது உச்சி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலில் டிரம்ப்பும், அதனை தொடர்ந்து கிம்மும் அங்கு சென்றடைந்தனர். கடந்த ஜுன் மாதம் சிங்கப்பூரில் முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து,

இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இரு தலைவர்களும் புன்சிரிப்புடன் கை குலுக்கிக் கொண்டனர்.

அப்போது பேசிய டிரம்ப் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

வடகொரியா தலைவர் கிம்முடன் இருப்பது கவுரவம் அளிப்பதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

இரு தலைவர்களுக்கு இடையிலான உறவு உண்மையிலேயே சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அபரிதமான, வரம்பற்ற பொருளாதார ஆற்றல் வடகொரியாவுக்கு இருப்பதாக டிரம்ப் கூறினார்.

அனைத்து தரப்பினரும் வரவேற்க கூடிய முடிவை பேச்சுவார்த்தையில் எட்ட முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், இரவு உணவு விருந்திலும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

வியாழன்றும் இரு தரப்பிலும் தொடர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சந்திப்புக்கு பின்னர் அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

எனவே கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.