தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். கடந்த, 24 மணி நேரத்தில், கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம்,புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும். மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.