தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் …

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். காரைக்கால், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் என்றும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.