முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல் சந்திப்பு


நடிகர் கமல் பிப்ரவரி 21 ஆம் தேதி கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து அறிவிக்க உள்ள நிலையில், இன்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான டி.என்.சேஷனை சென்னையில் சந்தித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் டி.என்.சேஷன். ஓய்விற்கு பின் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அவரை நடிகர் கமல் நேரில் சென்று சந்தித்து, அவருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கமல், அவரை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், உடல் நலத்தோடு இருந்தால் தன்னுடைய கட்சியில் இணைந்திருப்பேன் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 21 ஆம் தேதி கண்டிப்பாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிப்பதாக நடிகர் கமல் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி அவர் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிக்க உள்ளதால் அதுபற்றி டி.என்.சேஷனுடன் நடிகர் கமல் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.