விழுப்புரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு சமத்துவபுரம் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.2.88 கோடி மதிப்பில் இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் உருவ சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், புதியதாக உருவாக்கப்பட்ட பசுமை தோட்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். வீட்டில் உள்ள வசதிகள் பற்றி கேட்டு அறிந்தார்.

இதனை தொடர்ந்து சமத்துவபுர வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.12 லட்சம் செலவில் நூலக கட்டிடம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.42 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீட்டின் சாவியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர இந்த விழாவில் ரூ.24 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள், புதிய கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார்.

இந்த விழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.பி.க்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க் கள் புகழேந்தி, லட்சுமணன், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் கிராமத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்துக்கு சென்றார். அங்கு ரூ.500 கோடி மதிப்பில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்திருந்தனர். முதல்வர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் நகரம் மற்றும் வானூர், திண்டிவனம் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தி.மு.க. கொடிகளும், கட்சி தோரணங்களும், முதலமைச்சரை வரவேற்கும் விதமாக கட்டப்பட்டிருந்தது.