இன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்

கவிஞர் இன்குலாப் குறித்து ஜனவரி 5, 2017  ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்த கட்டுரை, 01.12.17 அவரது முதலாமாண்டு நினைவு நாள்

சில நேரங்களில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும், ஒரு தொலைபேசி அழைப்பு காலையில் என்னை எழுப்பியது. “தோழர், நேத்து இன்குலாபைப் பார்த்தேன். உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டுப் போயிருந்தேன். ரொம்ப முடியாம இருக்கார். போன உடனே அவர் முதலில் கேட்டது, மார்க்ஸ் எப்படி இருக்கார்னுதான்…”

இனி என்ன செய்தாலும் ஆற்றிக் கொள்ள இயலாத துயராக அடுத்த சில வாரங்களில் அந்தச் செய்தி. கடைசியாக அவரைச் சந்தித்தது கவிக்கோ அப்துல் ரஹ்மான அவர்களின் பவழ விழா நிகழ்ச்சியில். ஊரப்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்த பின் இன்குலாபைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. உடனடியாகச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூட இயலாத தொலைவில் இருந்தேன். என் துயரத்தை நண்பர்களோடு முகநூலில் இப்படிப் பகிர்ந்து கொள்ளத்தான் முடிந்தது.

“இன்குலாப் என் இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர். என்னுடைய முதல் நூல் ‘எதுகவிதை’ யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரைக் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள்,  பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்.

சோழர்கால நிலவுடமைக் கொடுமையைத் தோலுரித்த இன்குலாப்பின் ‘ராஜராஜேச்வரீயம்’ எனும் கவிதை அன்றைய அரசால் பாடநூலிலிருந்து நீக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் ஊடாக நாங்கள் எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.

தஞ்சையில் ஏகப் பெரிய விளம்பரங்களுடன் ராஜராஜ சோழன் சிலையை கருணாநிதி அரசு திறந்தபோது இன்குலாப்பின் அந்தக் கவிதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நானும் மன்னை உ.இராசேந்திரனும் தஞ்சை வீதிகளில் வினியோகித்துத் திரிந்தபோது காவல்துறை எங்களை வலைவீசித் தேடியது.

எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் இன்குலாப். அப்போது நான் தஞ்சையில் வசித்து வந்தேன். சென்னை வரும்போதெல்லாம் தவறாது ஜாம்பசார் ஜானிஜான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்வேன். முதல் முறை நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவர் கீழே ஓடி ஓடிச் சென்று குழாயில் நீர் பிடித்துச் சுமந்து வந்த காட்சி இன்னும் நிழலாய் என் மனதில்……

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற் பெயரைக்கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

ஈழப் போராட்டம் மேலெழுந்தபோது அவர் முழுமையாக எந்த விமர்சனங்களும் இன்றி அதை ஆதரித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டு , இறுதிப் பத்தாண்டுகள் அதிக இயக்கமின்றி முடங்க நேரிட்டது. மென்மையும், அன்பும், கனிவும் மிக்க அவரது குரலையும், புன்னகை தவழும் அவரது முகத்தையும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை எல்லோரும் இழக்க நேரிட்டது.

இனி அவரை என்றென்றும் பார்க்க இயலாது என எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்கிறது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது.

என் காலத்துப் புரட்சிக் கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள் !”

#   #    #

சிறுபான்மைச் சமூகத்திற்குள்ளும் பின் தங்கிய ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த  இன்குலாப் மொழி மற்றும் இனப் பற்றுகளின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். அக்டோபர் 1, 2000 த்த்தில் அவர் இலங்கை தமிழ் இதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், “சமூகத்தை மாற்றி அமைக்கக் கூடிய புரட்சிகர அரசியலில்தான் என் இளமைக் காலத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது” எனக் கூறிய அவர், அதை அன்றைய தி.மு.க சாதிக்கும் எனத்தான் நம்பியதையும் பதிவு ன்செய்கிறார். “கருப்பு சிவப்புக் கொடி முழு சிவப்பாக மாறும்” என அண்ணா சொன்னதையும் நம்பினார். “1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் திராவிடநாடு வரும்” என எதிர்பார்த்தார், ஆனால் அவர் நம்பிக்கைகள் பொய்த்தன. 1968ல் நடந்த கீழ்வெண்மணிக் கொடுமை, அதற்குக் காரணமானவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதில் அன்றைய ஆட்சியாளர்கள் காட்டிய மெத்தனம், அண்ணாவின் மறைவு, சிம்சன் தொழிலாளர் போராட்டத்தை தி.மு.க அரசு கொடுமையாக அடக்கியது ஆகியன தன்னைத் திராவிட இயக்க அரசியலிலிருந்து விலக்கி நக்சல்பாரி இயக்கத்தை நோக்கிக் கொண்டு சென்றதாக அந்த நேர்காணலில் கூறுகிறார்.

தனக்கு எக்காலத்திலும் தேர்தல் அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை எனக் கூறும் அவர் அதனாலேயே “புரட்சியை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்திருந்த”தாக அன்று அவர் நம்பிய நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்.

அப்போது நக்சல்பாரி இயக்கம் இந்தியாவெங்கிலும் அது கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியது. இன்குலாபும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டதோடு நள்ளிரவில், குழந்தைகள் தூக்கம் கலைந்து பதற, உறுமிய ஜீப்பில் வந்து வந்து அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்ட அனுபவங்களையும் எதிர் கொள்ள நேரிட்டது.

“என் வாழ்க்கை எப்போதும் பணி அச்சுறுத்தலுக்கும், எதிர்கால அச்சுறுத்தலுக்கும் இடையேதான் கழிந்திருக்கிறது. ‘சில நேரங்களில் உயிர்தரிப்பது வாழ்க்கையாக இருக்கிறது. சிலநேரங்களில் உயிர் கொடுப்பது வாழ்க்கையாக இருக்கிறது’ என மகாகவி இக்பால் எழுதியதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்” என வாழ்வின் இறுதிக் கட்டத்தில் (2015) அவர் ‘குங்குமம்’  இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுவதை அத்தகைய வாழ்வை வாழ்ந்தவர்கள்தான் எளிதில் உணர்ந்து கொள்ள இயலும்.

இருந்தபோதும் அவர் எந்நாளும் அத்தகைய ஒடுக்குமுறைகளையும் போராட்டங்களையும் தன் கவிதைகளிலும் ‘தராசு’, ‘உங்கள் விசிட்டர்’ முதலான செய்தி இதழ்களில் எழுதிய பத்திகளின் ஊடாகவும் கண்டிக்கத் தவறவில்லை.

நெருக்கடி நிலை காலத்திற்குப் பின் அரசியலுக்கு வந்த எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு அவரது எழுத்துக்கள் ஆதர்சமாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் அவரது அரசியல் தொடர்புகள் நக்சல்பாரி இயக்கங்களுக்குள் ‘வினோத் மிஸ்ரா குழு’ எனப்பட்ட சி.பி.ஐ (எம்.எல்) எனும் அமைப்புடன் இருந்தன. அது நக்சல்பாரி அரசியலில் இரண்டாவது கட்டம் எனலாம். இந்திய அளவில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்த இயக்கம் சிதறிக் கொண்டிருந்த காலம் அது. நக்சல்பாரி இயக்கத்தை அடையாளப்படுத்திய அம்சங்களில் ஒன்றான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் பாதையை நோக்கித் திரும்பியிருந்த குழு அது. அன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களையும் புரட்சிகரச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்தைக் கொண்டிருந்த வகையிலும் அது பிற குழுக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தது. எங்களைப் போன்றவர்கள் இந்த அணுகல்முறைகளை ஏற்காததால் நாங்கள் வேறு குழுக்களில் இருந்தோம். இருந்தபோதிலும் இன்குலாபின் எழுத்துக்களும் கவிதைகளும் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்ட அனைவராலும் ஏற்கப்பட்டன. கொண்டாடப்பட்டன.

1980 களுக்குப் பின், குறிப்பாக 1983 க்குப் பின் தமிழக அரசியலில் ஈழப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்ததை அறிவோம். அடிப்படையில் தமிழ்த் தேசியப் பற்று மிக்க இன்குலாப் முழுமையாகத் தன்னை ஈழ ஆதரவுக்கு அர்ப்பணித்துச் செயல்பட்டார். இறுதிவரை அவரது அர்ப்பணிப்பு தொடர்ந்தது.

#   #   #

எனினும் இன்குலாப்பின் அரசியல் தமிழ்த் தேசியத்திலிருந்து பல அம்சங்களில் வேறுப்பட்டிருந்தது. இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் உருவாக்கியிருந்த, உருவாக்கி வருகிற ‘தமிழக வரலாற்றுப் பொற்கால’ பிம்பத்தை அவரளவு கட்டுடைத்தவர்கள் யாருமில்லை.

“திராவிட இயக்கங்கள் முன்னின்று நிகழ்த்திய மறுமலர்ச்சி இயக்கம் கூட புராணத்திற்கு மாற்றாகத் தமிழ்த் தொன்மங்களைத்தான் முன்வைத்தது. எல்லாம் மூவேந்தர் காலப் பெருமிதங்கள். பத்தினித் தனத்தின் உன்னதங்கள். பகுத்தறிவையும் மக்கள்நாயகத்தையும் நாத்தளராது சொற்பொழிந்தாலும் வரலாறு எனக் காட்டியவை மன்னர் காலக் கற்பிதங்கள். வீரத்துக்கு ஒரு கரிகாலன், விரிவாக்கத்துக்கு ஒரு ராஜராஜன் என்று பீத்தல் ராஜ உடைகளைப் போட்டுக் கொண்டு மக்களின் சிந்தனைகளை முடக்கினார்கள்”

என்பது அவரது கூற்று.

இது ஏதோ திராவிட இயக்கத்தை நோக்கிச் சொன்னவை என இன்றைய தமிழ்த் தேசியர்கள் மவுனம் காக்க இயலாது. இன்குலாப்பால் இழிவு செய்யப்பட்ட இந்த நிலவுடமைக் கொடுமைகளைத்தான் இன்றைய தமிழ்த் தேசியர்கள் தமிழர்களின் “காணியாட்சி முறை” எனப் பெருமிதம் கொள்கின்றனர். இன்குலாப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ராஜராஜன் அறிமுகப்படுத்திய தேவதாசி முறையை இன்று அவர்கள் கொண்டாடுவதை யாரும் மறந்துவிட இயலாது. இன்குலாபின் ‘ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம்’, ‘ஶ்ரீராஜராஜேச்சுவரியம்’, ‘பொட்டல் தோண்டிகள்’ எனும் மூன்று நெடுங்கவிதைகள் இந்த வகையில் முக்கியமானவை. தமிழ்த் தேசிய அரசியல் அபத்தங்களைக் கட்டுடைத்தவை.

இன்குலாப் இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் பேரா.நா.வானமாமலை மற்றும் மே.து.ராசுகுமார் போன்ற அவரது குழுவினர் ஒரு பக்கமும் நொபோரு கரோஷிமா, கத்லீன் கவ், ஒய்.சுப்பராயலு போன்றோர் இன்னொரு பக்கமும் சோழர்காலம் குறித்த பல முக்கியமான ஆய்வுகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர். முன்னதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலானோர் கட்டமைத்திருந்த பொற்காலக் கட்டமைப்பு கலகலத்திருந்த காலம் அது. அவற்றை உள்வாங்கி எழுதப்பட்டவை இக்கவிதைகள்.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பேராசிரியரான இன்குலாப் ஆக்கிய இரு முக்கிய நாடக ஆக்கங்களான “ஔவை” மற்றும் “மணிமேகலை” ஆகிய இரண்டும்கூட இந்தத் தமிழ்த் தேசியப் பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தமிழ்த் தேசியம் என்றைக்குப் பெண்ணியம், தலித்தியம் குறித்தெல்லாம் பேசியது? என்றைக்கு அவற்றை அது கொண்டாடியது?

இன்குலாப்பின் ஔவை குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். அது நம் தமிழ்ப் பாரம்பரியம் மட்டுமல்ல ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.வாசன் முதலானோர் முன்வைத்த ஔவையிலிருந்தும் வேறுபட்ட ஒன்று. பட்டையும், கொட்டையுமாய் முருகனைப் பாடிய ஒரு வயதான மூதாட்டியாக ஆத்திச்சூடி பாடிய ஔவையையும், விநாயகரகவல் மற்றும் ஞானக்கோவை பாடிய ஔவையையும் ‘தமிழ் மூதாட்டியாக’ அடையாளப்படுத்திக் கொண்டிருந்த தமிழ் மரபில் பாட்டும் கூத்துமாய்ப் பாடிவந்த சங்கத்து ஔவையை  மேடை ஏற்றினார் இன்குலாப். அவள் துள்ளும் இளமையள். அதியனுடன் கள்ளருந்தி மகிழ்பவள். அதேபோல அவர் தன் இறுதிக்காலத்தில் இன்னொரு நாடக நாயகியாக வரித்துக் கொண்டது சாத்தனாரின் மணிமேகலை. சமகால ஆண் தத்துவவியலாளர்கள் பலரையும் வாதில் வென்றவர் அவர். ஒரு பெண்ணைக் காவியத் தலைவியாகக் கொண்ட ஒரே பெருங்காவியம் அது.

இன்குலாபின் தலித் வெளிப்பாடுகள் குறித்து இங்கு விரிவாகச் சொல்லத் தேவையில்லை. அந்த வகையில் அவர் வெண்மணி ஈன்ற புத்திரன். அவர் காலத்தில் நடந்த தலித்கள் மீதான அனைத்து வன்முறைகளும் அவர் மூலம் கவிதைகளாய்ப் பதிவு கண்டன. அவரது ‘மனுசங்கடா’ பாடலை நண்பர் கே.ஏ.குணசேகரனுடன் பட்டி தொட்டிகளெல்லாம் முழங்கியவர்களில் என் இரு மகள்களும் உண்டு என்பதை கண்களில் நீர்பனிக்க நினைவுகூர்கிறேன்.

இவை மாத்திரமல்ல. ஈழத் தமிழ் இதழுக்கு அளித்த அந்த நேர்காணலில் அவர் இன்னொன்றையும் சொல்வார். தான் வெறும் தமிழ் உணர்வால் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை எனக் கூறும் இன்குலாப், ஒருவேளை இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக இருந்து அவர்களால் சிங்களச் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டார்கள் எனின் நான் அந்தச் சிங்களச் சிறுபான்மையோருடன்தான் நிற்பேனென்றார். அவரது உணர்வுகள் அறச்சீற்றத்தின் அடிப்படையிலானவை. வெறும் கேவலமான அர்சியல் லாபம் கருதியவை அல்ல.

#   #   #

“அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவி மடுப்பதில்லை” எனக் கூறும் இன்குலாப்,

“எனக்கு இசை தெரியாது. எனக்குக் கவிதை வசப்பட்டு வரும் முன்னே பாட்டு வசப்பட்டு இருந்தேன். என்னால் பாடமுடியாது. ஆனால் எனக்குள் எப்போதும் பாடியபடியே இருக்கிறேன். என் இசை எழுத்தாகிறது. அதிலும் போராட்டங்களின் கருக்களே என் இசை…”

“புரட்சிகர மரபு என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததல்ல. போராட்டத்திலிருந்துதான் கோட்பாடுகளும் மரபுகளும் உருவாகின்றன..”

என வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் போராட்டங்களின் புகழைப் பாடியவர் அவர்.. ஒரு மதவாதி கடவுளை வைக்கும் இடத்தில் அவர் போராட்டத்தை வைத்தார். எப்படி ஒரு மதவாதி அவனது கடவுள் விமர்சிக்கப்படுவதையோ, ஆய்வு செய்யப்படுவதையோ ஏற்றுக் கொள்ளமாட்டானோ அதே போல இன்குலாபுக்கும் போராட்டங்கள் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை.

2012 என நினைக்கிறேன். தோழர் வைகறை அவர்கள் இன்குலாப்பின் நேர்காணலுடன் என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் பெற்று ஒரு சிறு மலரொன்றை வெளியிட்டார். அதில் “இன்குலாப் : வற்றாத கவிதை ஊற்றின் இரகசியம்” எனும் தலைப்பில் நான் எழுதிய சிறு கட்டுரையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்திருந்தது;

“இந்தக் குறிப்பை எழுதுவதற்காக அவரது ‘ஒவ்வொரு புல்லையும்..’ என்கிற பெருந்தொகுப்பைப் புரட்டுகிறபோது இந்தக் கவிதைகள் அனைத்தையும் அவர் ஒரே நாளில் எழுதி முடித்தாரோ என்கிற பிரமிப்புத்தான் நம்மை அசத்துகிறது. கருத்து, உணர்ச்சி, மொழி, சொற் தேர்வு, இன்குலாப்பிற்கே உரித்தான அந்த இசை லயம்… இவற்றில் எந்தச் சிறு மாற்றமும் இல்லை. அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்த கவிதா மனோநிலை, உணர்ச்சிப் பெருக்கு ஆகியவற்றைச் சிறிதும் வற்றவிடாமல் அவர் எப்படிப் பாதுகாத்து வருகிறார்? 39 வயதில் செத்துப் போன பாரதி இன்னும் 30 ஆண்டு காலம் உயிருடன் இருந்திருந்தால் இப்படித் தன் கவித்துவத்தையும் சிந்தனைப் போக்கையும் மாற்றமின்றித் தக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் மிகப் பெரிய மாற்றங்கள் இன்குலாப் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்டுவிட்டன. சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒன்று போதாதா மார்க்சீயத்தால் உந்துதல் பெற்ற ஒரு கவிஞன் நிலைகுலைய? நம் கண்முன் ஒரு ஒற்றைத்துருவ உலகம் உருவானது. மார்க்சீயத்திற்கு அடுத்தபடியாக இன்குலாப்பிற்கு உந்துதல் அளித்த ஈழப் போராட்டம் நசிந்தது. நசுக்கப்பட்டது.  இவை இன்குலாப்பிற்கு நிச்சயம் துயரத்தை விளைவித்துருக்கும்தான். ஆனால் எந்த மாற்றத்தையும் கலக்கத்தையும் அவரிடம் இவை ஏற்படுத்திவிடவில்லை. அவர் போராட்டங்கள் ஈன்ற சிசு. ‘எல்லாம் போராடும். நீயும் போராடு’ என்பதே அவரது தாரக மந்திரம். அவரைப் பொருத்தமட்டில் போராட்டங்கள் ஆய்வுக்குரியவை அல்ல. ஆய்வுசெய்பவர்களை அவர் சகித்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த மூலையில் போராட்டங்கள் நிகழ்ந்தாலும் அவை அவரது கவிதைகளின் உயிர் மூச்சைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும். வற்றாத ஊற்றாய் அதே உற்சாகத்துடன் அவரிடம் கவிதைகள் ஊறிக் கொண்டிருப்பதன் இரகசியம் அதுதான்.”

#    #    #

இன்குலாப்பின் கவிதை ஆக்கங்கள் குறித்து இங்கு கவிதைகளே இல்லை எனச் சிலர் கூறுவது உண்டு. அந்த மேட்டிமை விமர்சனங்களுக்குத் தான் பதிலளிப்பதே தனக்கு இழுக்கு எனக் குறைந்தபட்சம் இருமுறை பதிவு செய்துள்ள இன்குலாப் அதற்காக விமர்சனங்களை முகம் கொள்ளத் தயங்கியதில்லை. சுய விமர்சனங்களுக்கும் அஞ்சியதில்லை. அப்படியாகவும், தன் நிறைவேறாத இலக்குகளாகவும் அவர் கூறிய சிலவற்றையும் தொகுத்துக் கொள்வது அவரைப் பற்றிய மதிப்பீடுகளுக்கு உதவும்.

சொல்வார்:

“இவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்போதுதான் எனக்கு எழுத்து பிடிபடுவதுபோலத் தோன்றுகிறது..”

“போராட்டங்களைப் பதிவு செய்துள்ள போதிலும் வெகுமக்களைக் கருவாகக் கொண்ட நெடுங்கவிதை ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தக் கனவு நாடகங்களாக வடிவம் கொண்டு வருகிறது..”

பல்வேறு சமரசங்களோடுதான் தன் வாழ்க்கையும் அமைந்துள்ளது என ஓரிடத்தில் கூறும் இன்குலாப் எனினும் சமரசங்கள் சாசுவதமில்லை, அவற்றிற்கு அப்பாற்பட்ட போராட்டங்கள்தான் சாசுவதம் என்கிறார்.

“சமரசங்களால் கிடைக்கும் பலன்களைக் காட்டிலும் போராடுவதால் கிடைக்கும் நஷ்டங்களை நான் மதிக்கிறேன்..”

என்று கூறுபவர் தான் வந்த அரசியல் பாதை குறித்த சுயவிமர்சனமாகச் சொல்வது:

“இன்னும் நான் போராட்டத்திற்கான அமைப்பை முழுமையாக ஏற்றிருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கு பெறுவது என்றில்லாமல் பலபோராட்டங்களை நான் கட்டமைத்திருக்க வேண்டும்.சில போராட்ட வாய்ப்புகளை நான் தவறவிட்டுவிட்டேன். எழுத்துபூர்வமாக நான் எளிய மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் களப் போராளியாக நான் இன்னும் முனைப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்…”

மொத்தத் தொகுப்பை உருவாக்கியபோது அவற்றில் கவித்துவம் குறைந்த சிலவற்றை நீக்கிவிடலாம் என எண்ணியதாகவும், அப்போது உரையாடிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘இல்லை அப்படியே வரட்டும்’ எனச் சொல்லியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் சொல்லும் இன்குலாப்,

“ஒரு கவிதை அதற்குரிய கலை நியாயங்களுடன் இயங்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் கவிதைகள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடிப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக என் கவிதை இருந்தது. அதனால் கவித்துவத்தில் பின்னப்படாத வெறும் வரிகளாகவும் வெளிப்பட நேர்ந்தது. அக்காலத்திய அரசியல் நிகழ்வுகளின் பதிவு என்பதால் கவித்துவம் குறைந்த சில வரிகளையும் தெரிந்தே இணைத்துள்ளேன்..”

“என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும், பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம் காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலில் அடையாளம் காட்டவில்லை. இன்று அது எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. இந்த வயதில் அது தனது முழு அழகையும் ஒளிவு மறைவில்லாமல் காட்டுகிறது. இந்தக் காட்சிக்கு இவ்வளவு காலம் ஆனதற்கு நான் காரணமா? கவிதை காரணமா? இன்று இந்த அழகின் உள்ளடக்கத்தை நான் வரித்துக் கொண்டாக வேண்டும்…”

இன்குலாப் போராட்டங்கள் ஈன்ற சிசு. தன்னலம் குடும்பநலம் என எதையும் அவர் தனது லட்சியங்களுக்கு இடையூறாவதை அனுமதிக்காது வாழ்ந்து மறைந்தவர்.

அவரது கவிதை ஆக்கங்களைப் பொறுத்த மட்டில் அவரே ஒரு கணம் யோசித்தது போல ‘கவிதைக்குரிய கலை நியாயங்கள் அற்ற கவிதைகளை” நீக்கி ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டும் எனில் இப்போதுள்ள அவரது பெருந்தொகுப்பில் கிட்டத்தட்ட பாதிக் கவிதைகளை நீக்கிவிட்டு ஒரு செந்தொகுப்பை உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால் அது தமிழ்ப் பாரம்பரியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அமையும் என்பது உறுதி.

 

நன்றி: அ.மார்க்சின் இணையதளத்தில் இருந்து – http://www.amarx.in/