10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி..

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டது.91.39% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.

இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.

இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904,
மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக எஸ்எஸ்எல்சி முடிவு அனுப்பி வைக்கப்பட்டது.