கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி

கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால அவகாசம் அளிக்கலாம்.

வங்கிக் கடன் நிலுவைகளுக்கு 3 மாதம் கழித்து தவணை செலுத்த வங்கிகள் அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. தொழில்கள் முடக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார அளவில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசக் காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது என்றும் சக்தி காந்ததாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் வங்கிகளின் அமைப்பு பாதுகாப்பாகவே உள்ளது. தனியார் வங்கிகளிலும் முதலீடுகள் பாதுகாப்பாகவே உள்ளன.

உடனடியாக வங்கிகளில் இருக்கும் பணத்தை எடுத்து விட வேண்டும் என்று பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.-