அதிவேக 5ஜி சேவை :சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டு தொடக்கம்..

அதிவேக அலைவரிசையான 5ஜி சேவை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்தாண்டுபயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசின் தொலை தொடர்புத்துறையான டிராய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு துறையின் ஆண்டு இறுதி அறிக்கையில், செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் மற்றும் அதற்கான அடிப்படை விலை, ஏலம் விடப்பட வேண்டிய அளவு, ஏல வழிமுறை ஆகியவற்றில் உள்ள பல்வேறு நடைமுறைகளுக்கு அனுமதி கேட்டு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் கடந்த செப்டம்பரில் பரிந்துரை சமர்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அனுமதி கிடைத்ததும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏர்டெல், ஜியோ, வோடோ போன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை வெள்ளோட்டத்திற்கான மையங்களை தயாராக வைத்திருப்பதாகவும், இந்த நகரங்களில் 5ஜி சேவை நாட்டிலேயே முதலாவதாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொலைத்தொடர்புத்துறை, நேரடி அந்நிய முதலீடு 150 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு தொலைத்தொடர்புத்துறையால் சுமார் 224 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 5ஜி பரிசோதனை படுகை திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.