சிரியா மீதான ஐ.நா. விசாரணை: வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது ரஷ்யா..


சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் குறித்து ஐ.நா. சபை விசாரிக்க வகை செய்யும் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது.
சிரியாவில் கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் ரசாயன தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஐ.நா. சபையின் கூட்டு விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இதில் சிரியா அரசு படை குளோரின் வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் கான் ஷோக்கான் பகுதியில் சரின் வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் பின்னணியில் சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. சீனாவும் எகிப்தும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யாவும் பொலிவியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இறுதியில் தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரஷ்யா ரத்து செய்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. சபையின் எந்த தீர்மானத்தையும் ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரம் ஒருதலைப்பட்சமாக பயன்படுத்தப்படுவதாக பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.