தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்?

 

 

ஈஸ்டர் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள முக்கியத் தேவாலயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அதே தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஏதாவது ஒரு நாட்டில், கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த புதிதாக தோன்றியுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாக 6 மாதத்திற்கு முன்பு தகவல் கசிந்துள்ளது.

தமிழகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்று ரகசிய தகவலில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்ததால், தங்கள் தாக்குதல் திட்டத்தை பாதுகாப்பு குறைவாக உள்ள இலங்கைக்கு பயங்கரவாத அமைப்பு மாற்றி இருக்கலாம் என்று தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், எழும்பூர் கென்னட் லைனில் உள்ள புத்தமடம் ஆகியவற்றிலும் போலீசார் பாதுகாப்புக் காக நிறுத்தப்பட்டுள்ளனர்.