சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி : அரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு..

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்து விட்டு, மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் பரப்புரைக் கூட்டத்தில் குற்றம்சாட்டினார்

அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மணி, தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக அரூரில் அவர் பரப்புரை செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்து விட்டு, மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருக்கிறார். அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்.

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அவரை புகழக்கூடிய புலவராக மாறி இருக்கிறார். ஜெயலலிதாவை திட்டித் தீர்த்து புத்தகம் வெளியிட்ட ராமதாசோடு எடப்பாடி பழனிசாமி கூட்டு வைத்துள்ளார்

கூட்டணி என்ற பெயரில் கொள்கையை அடகு வைத்துள்ள கட்சி பா.ம.க., எடப்பாடி பழனிசாமி ராமதாஸ்க்கு மணியடிக்கிறார் என கூறியவுடன் கோபம் வருவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.