ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல்: பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு..

ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக, வந்த மிரட்டலை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி,

விமான நிறுவனங்கள் மற்றும் சிஐஎஸ்எப் அமைப்பிற்கு, விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில்,

இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மிரட்டலை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) ஆகியவற்றிற்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு பிறப்பித்த உத்தரவு:

* விமான நிலைய முனைய கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

* கார் மூலம் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் வகையில், கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும்.

* விமான நிலையத்தின் பிரதான வாயில் வழியாக நுழையும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களையும் சோதனை செய்ய வேண்டும்

* உடமைகள், சரக்குகள், சரக்கு முனையங்களில் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும்.

* டெர்மினல் கட்டடங்கள் உள்ளேயும், வெளியேயும், சிசிடிவி கேமராக்கள் மூலமும், பாதுகாப்பு வீரர்கள் மூலம் சோதனை செய்ய வேண்டும்.

* அதி விரைவு குழு மற்றும் ரோந்து குழுவினரை பலப்படுத்த வேண்டும்

* சரக்குகள் வரும் வாயில்கள், வாகனங்கள் நுழையும் வாயில்களில், ஆயுதங்களுடன் பாதுகாப்பு வீரர்களை நிறுத்த வேண்டும்.

* உள்ளூர் உளவுத்துறை தகவல்படி, மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

விமான கடத்தல் விவகாரத்தை கையாளும் வகையில், விமான கடத்தல் தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விமானத்தை கடத்தி, யாருக்கேனும் உயிர்சேதம் ஏற்படுத்தினால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.