அமெரிக்கர்கள் பாக்., செல்ல வேண்டாம்: வெள்ளை மாளிகை எச்சரிக்கை..


அமெரிக்கர்கள் தங்களது பாகிஸ்தான் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு: பாகிஸ்தானுக்கு செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு தூதர்கள், அரசு அதிகாரிகள், மனித நேய ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பழங்குடியின தலைவர்கள் மீது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. அந்நாடு முழுவதிலும், அமெரிக்கர்களுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. கடந்த காலத்தில், அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும். அமெரிக்கர்களை கடத்தி செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத வழிபாடு தொடர்பான சட்டங்களை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு தயங்கி வருகிறது. சிறுபான்மை இனத்தவர்களை குறி வைத்து தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கி வருகின்றனர். இதனால், பலுசிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.