அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்த போலீஸ்..


அலகாபாத்தில் அமித் ஷா சென்ற வாகனத்தை மறித்து 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மாணவர் கறுப்புக் கொடி காட்டினர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில் அலகாபாத் பலகலைக் கழக மாணவிகள் இருவரை போலீசார் தாக்கியது பரபரப்பாகியுள்ளது.

பாஜக தலைவர் அமித் ஷா சென்ற வாகனத்தை மறித்து கருப்புக் கொடி காட்டிய இரண்டு பெண்களை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் தாக்கியுள்ளனர், அதுவும் ஒரு மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலஹாபாத்துக்கு வந்திருந்த அமித் ஷாவுக்கு அலகாபாத் பல்கலை மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது போலீஸார் 2 மாணவிகள் ஒரு மாணவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு பெண்ணை தடியால் அடித்ததோடு காவல்துறையைச் சேர்ந்த இன்னொரு போலீஸார் மற்றொரு மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார்.

வீடியோவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் வேகமாக வந்து தலையிட்டு அடிக்க வேண்டாம் என்று தடுத்ததும் பதிவாகியுள்ளது.

இந்த 3 மாணவர்களும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், நேஹா யாதவ், ரமா யாதவ், கிஷன் மவுரியா ஆகிய 3 மாணவர்களூம் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.