அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு…

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து குறித்து தமிழக அரசின் ஆலோசனையை பெறாமல் துணை வேந்தர் சூரப்பா தன்னிசையாக கடிதம் எழுதினார். இது அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டன் குரல்களை எழுப்பினர்.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ‘அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சிறப்பு தகுதி இல்லாமலேயே அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் வெளி மாநில மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கக் கூடும். உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும்.

சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும்.சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும். இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உலகத் தரத்துடன்தான் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு கட்டுப்பட்டது தான் பல்கலைக்கழகமே தவிர, பல்கலைக்கு கட்டுப்பட்டது அல்ல அரசு.’ என்றார்..

சிறப்பு அந்தஸ்தை நிராகரிக்க அன்பழகன் கூறிய 4 காரணங்கள்: ]

  1. தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்படடு வரும் 69% இட ஒதுக்கீடு பறிபோய்விடும்.
  2. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகரிக்கும்.

3.அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு புகுந்துவிடும்.

  1. அண்ணா பல்கலை. யில் வெளிமாநில மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிடும்.