பாரதிதாசன் பல்கலை.யில் பட்டமளிப்ப விழா பிரதமர்,முதல்வர்,ஆளுநர் பங்கேற்பு..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். முதல் நிகழ்ச்சியாக பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி.

பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “எனது மாணவ குடும்பமே.. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. ஏனென்றால், புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் என்பதில் மகிழ்ச்சி.

பண்டைய காலத்திலேயே காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் கல்வியில் சிறந்து விளங்கியது. தற்போது இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையுடன் பார்க்கிறது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா புதிய உயரங்களை படைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் முதல் பிரதமர் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால் நமது நாடும் சிறந்து விளங்கும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைகழகங்களை தொடங்கினர். பல்கலைக்கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது. கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும். மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும். புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுகிறார்கள்.

மாணவர்கள் பட்டம் பெற்றதில் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பங்கு உண்டு. இந்த சமூகத்துக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இந்த சமூகம் உங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறது. வரலாற்றில் பல மாற்றங்கள், சாதனைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்களே. கற்ற கல்வியும், அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கும் கைகொடுக்க வேண்டும். கற்கும் கல்வி அறிவை வளர்ப்பதோடு, சகோதரத்துவம், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும். பல்கலையில் படிப்பதோடு உங்கள் கற்றல் நின்று விடக்கூடாது.

நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான திறன்களை வளர்த்து கொண்டு இருக்க வேண்டும். நமது திறமைகளை உலக அளவிற்கு கொண்டு சேர்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், விமானம், நெடுஞ்சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறோம். விமான நிலையங்கள் இரண்டு மடங்குக்காக உயர்ந்துள்ளன.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.