வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் : அதிமுக அறிவிப்பு

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடக்கிறது என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

கடந்த முறை தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. இந்த முறை பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விறுவிறுப்பான அரசியல் கூட்டணி கணக்கை தொடங்கியது.

சூட்டோடு, சூடாக பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விருப்ப மனு அளித்துள்ள வேட்பாளர்களுக்கான நேர்காணல் 11-3-2019, 12-3-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

புதுச்சேரி நீங்கலாக 39 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது. 11 ஆம் தேதி 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் 12 ஆம் தேதி 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும்.

11 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கும்

பிற்பகல் 3 மணிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும்.

12 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளுக்கும்

மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல். விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல் 11-3-2019, 12-3-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். pic.twitter.com/0kfsdP79nz

— AIADMK (@AIADMKOfficial) 8 March 2019