சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை வீடியோ எடுத்த விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு..

மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ தலைமையில் விசாரணை குழு அமைப்பு. இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என பஞ்சாப் டிஜிபி உறுதி.

மொகாலி: பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர் இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக மாணவியர் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரி குர்பிரீத் கவுர் தியோ மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு புலனாய்வு குழு,இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கும் என்றும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை முழு வேகத்தில் நடைபெறுவதால், வதந்திகளை நம்பாமல், அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காக்க வேண்டும் என்றும் டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு செப்டம்பர் 24-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.