காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் நாளை வேட்பு மனு தாக்கல்..


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வரும் 5-ம் தேதி அவர் போட்டியின்றி தேர்வு ஆவார் என தெரிகிறது.

கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சுமார் 19 ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் உள்ளார்.

சோனியாகாந்தியின் உடல்நிலை காரணமாகவும், கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் விதமாகவும் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு ராகுல்காந்தி தயாராகும் விதமாக கடந்த 2013ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் துணைத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க சோனியா காந்தி இசைவு தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 16-ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த முதல் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் இன்றுவரை (ஞாயிற்றுக்கிழமை) வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில்அக்கட்சியின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் ராகுல் காந்தி நாளை (டிசம்பர் 4-ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அவரது வேட்பு மனுவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி ஆகியோர் முன்மொழிகின்றனர்.

டிசம்பர் ஐந்தாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை 3.30 மணியளவில் வெளியாகும். ராகுல் காந்தியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாத நிலையில் அன்றைய தினமே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறன்றி, வேறு யாராவது எதிர்த்து போட்டியிட்டால் வேட்பு மனுக்களை வாபஸ்பெற டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாளாகும். 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து, அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும்.