தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மூவர் விடுதலை : ஆளுநர் மாளிகை விளக்கம்..

கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணித்த பேருந்துக்கு தருமபுரி அருகே தீ வைத்தனர்.

அதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் கருணை மனு தாக்கல் செய்து, அது ஏற்கப்பட்டது. அதன்மூலம் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த சூழலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை மூன்று பக்க விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரையை ஆளுநர் மாளிகை உடனடியாக ஏற்கவில்லை. இருமுறை திருப்பி அனுப்பி, ஆளுநர் உரிய விளக்கம் கோரினார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆளுநரை நேரில் சந்தித்து 3 பேரையும் விடுவிக்க கோரினர்.

மாணவிகள் 3 பேரையும் கொலை செய்வது குற்றவாளிகளின் நோக்கம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றவாளிகள் 3 பேரும் 13 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால், விடுதலை செய்ய ஆளுநர் சம்மதம் தெரிவித்தார்.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகளால் சமுதாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்திய பிறகே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.