உலகக்கோப்பை கால்பந்து : உருகுவேயை வீழ்த்தி அரையிறுதியில் பிரான்ஸ்..


உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது..

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.

தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

2-வது பாதி நேரத்திலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

0-2 என பின்தங்கியதால் உருகுவே அணி கோல் அடிக்கும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலமுறை பிரான்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றது. ஆனால் அவற்றை வெற்றிகரமான வகையில் கோலாக மாற்ற முடியவில்லை. 90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. என்றாலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.