கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று மதியம் நேரில் பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு போதிய அளவில் உணவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கஜா புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

மேலும் சாலையின் இரு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அகற்றப்பட்டுவிட்டன.

30 ஆயிரம் மின்சாரக் கம்பங்கள் விழுந்துள்ளன, 105 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சீர்செய்ய 10 ஆயிரம் ஊழியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

புயலுக்கு முன்னதாகவே 471 முகாம்கள் அமைக்கப்பட்டன, தற்போது 351 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் 1,77, 500 பேர் தங்கவைக்கப்பட்டு, உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 203 மருத்துவ முகாம்களும், 435 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளி முகாமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு இல்லை என்ற பிரச்னையே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.