குஜராத் வாக்குபதிவின் போது ப்ளூடூத்துடன் வாக்கு இயந்திரம் இணைப்பா?..


குஜராத் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய தேர்தலில், போர்பந்தரில் ஒரு வாக்குபதிவு மையத்தில், வாக்கு இயந்திரத்துடன் ப்ளூடூத் இணைக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தேர்தல் கமிஷனில் இருந்து வந்தக் குழு அங்கு ஆய்வு மேற்கொண்டது.

இதனிடையே தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ப்ளூ டூத்துடன் இணைத்து மோசடி செய்ததாக வந்த தகவலை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை புரோகிராம் மூலம் மாற்றிவிட முடியும் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. பாஜகவினர் திடீரென அபரிதமான வெற்றிகளைப் பெறும்போதெல்லாம் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அண்மையில் உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் இந்த மோசடி பட்டவர்த்தனமாகவே தெரியவந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட மேயர் தேர்தல் இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

ஆனால் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்ட இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக படுதோல்வியையே சந்தித்தது.

இந்த நிலையில் குஜராத்தின் போர்பந்தரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமானது ப்ளூ டூத்துடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி சார்ப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

மின்னணு இயந்திரங்களின் புரோகிராமை ப்ளூ டூத் மூலம் ஆபரேட் செய்து, வாக்குகளை விரும்பும் கட்சிகளுக்கு மாற்றுகிற மோசடியைத்தான் இது அம்பலப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது ஒரு கட்சி பூத் ஏஜென்டின், இன்டெக்ஸ் செல்போனின் ப்ளூடூத் பெயரைத்தான் காங்கிரஸ்காரர்கள் தப்பாக புரிந்துகொண்டனர் என்பது கண்டறியப்பட்டது.

அந்த செல்போன் ப்ளூடூத் பெயர் ECO105 என்று காட்டியுள்ளது. ஈசி என்று எழுத்து துவங்குவதால் அது தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு என்று நினைத்து புகார் பதியப்பட்டது. இப்போது அந்த குழப்பம் தீர்ந்துள்ளது.