இந்தியாவில் புதியதாக மேலும் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 903 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 85 லட்சத்து 53 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 79 லட்சத்து 17 ஆயிரத்து 373 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92.56 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 673 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.96 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக, கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 490 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 125 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 59 பேர், டெல்லியில் 77 பேர், கர்நாடகாவில் 22 பேர், தமிழகத்தில் 20 பேர், உத்தரப் பிரதேசத்தில் தலா 26 பேர், கேரளாவில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 11 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 192 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 35 ஆயிரத்து 401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது