“மக்களை மது அருந்த அரசு வேண்டுகோள்”: இங்கல்ல ஜப்பானில்..

மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களையும் ஜப்பான் அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக சேக் விவா என்ற பிரச்சாரத்தை அந்நாட்டின் தேசிய வரி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும், 20 வயதிலிருந்து 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் நாட்டு மக்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என அரசாங்கம் சார்பில் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.

சிறந்த யோசனைகளை வழங்குபவர்களுக்குப் பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனாவிற்கு பின்பு மாறிய வாழ்க்கைமுறை காரணமாகவே ஜப்பானில் மதுக் குடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. அதற்கு முன்னரே படிப்படியாக ஜப்பான் மக்களிடையே இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 100 லிட்டர் மது அருந்திவந்துள்ளார். அதுவே 2020-ம் ஆண்டு ஒரு நபர் வெறும் 75 லிட்டர் மட்டுமே மது அருந்தும் அளவுக்குக் குறைந்துள்ளது.