கோவையில் கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின் ..

கோவையில் பி.பி.ஈ.கிட் உடை அணிந்து, கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின்

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு முதலமைச்சர், தன் சக அமைச்சருடன் பி.பி.ஈ.கிட் உடை அணிந்து, கரோனா நோய் சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் கள ஆய்வு செய்தார்.
மருத்துவர்கள் வேண்டாம் என்று வலியுறுத்திய போதும் கோவையில் கரோனா வார்டுக்கு சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் முதல்வர் ஸ்டாலின்.


கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை உச்சம் பெற்றுள்ளது. இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. கரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், உணவு வழங்கும் முறை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பி.பி.இ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

கரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! என பதிவிட்டுள்ளார்.

கோவையில் முதல்வர் ஸ்டாலின் கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டியது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. #WeStandWithStalin உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்