பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூடுகிறது..

இலங்கையில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது.

அந்நாட்டில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த வெள்ளியன்று அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார்.

இதையடுத்து ராஜபக்சே பிரதமராகவும் பதவியேற்றார். இதற்கெதிராக இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நாடாளுமன்றத்தை வரும் 16 ஆம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 5 ஆம் தேதி அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூட்டியிருப்பதாக, பிரதமர் ராஜபக்சே இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே இந்த தகவலை வெளியிட்டார்.