‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக உ.பியில் அவசரச் சட்டம்: முதல்வர் யோகி முடிவு ..

காதல் என்ற பெயரில் மதமாற்றத்தை தடுக்கத் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “ காதல், திருமணம் என்ற பெயரில் சமீபமாகக் கூட பெண்களை மயக்கி மதம் மாற்றி பிறகு கொடுமைப்படுத்தி கொலை வரையிலும் நடைபெறுகிறது. இதை கவனமேற்கொண்ட முதல்வர் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க நல்ல உபாயத்தை வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதை நல்ல ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்ய வேண்டும். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உத்தரவாதம் செய்யவும் சட்டம் அவசியம் என்று முதல்வர் உணர்கிறார்” என்றார்.

கான்பூரில் லவ் ஜிகாத் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உ.பி. சட்ட ஆணையம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கட்டாய மதமாற்றம் குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையுடன் வரைவு சட்ட மாதிரியையும் அளித்துள்ளது. இதற்குப் பெயர், ‘உ.பி.மதச் சுதந்திர மசோதா, 2019’ என்று கமிஷன் செயலர் சப்னா திரிபாதி தெரிவித்தார்.

ஏற்கெனவே உள்ள சட்டங்கள் மதமாற்றத்துக்கு எதிராக போதுமானதாக இல்லை. எனவே புதிய சட்டம் அவசியம் என்று முதல்வர் உணர்வதாக சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்ட ஆணையம் 268 பக்க அறிக்கையுடன் மதமாற்றச் சம்பவங்களின் செய்தி அறிக்கை குறித்த செய்தித்தாள் கிளிப்பிங்குகளை சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில், ம.பி., ஒடிசா, அருணாச்சலம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், சத்திஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் மோசடி திருமணங்களுக்கு எதிராகச் சட்டங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.