முதல்வர் பதவியுடன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே….

மராட்டியத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி சட்டப்பேரவை உறப்பினர்கள் திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.
சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி சட்டப்பெரவை உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கினர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், சட்டப்பேரவையை கூட்டி மராட்டிய அரசு இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று அதிகாலை உத்தரவிட்டார்.
ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை திட்டமிட்டபடி நடத்த உச்ச நதீமன்றம் அனுமதியளித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவு வெளியான சிறிது நேரத்தில் முதல்வர்பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மேலும், தனது ராஜினாமா கடிதத்தை உத்தவ் தாக்கரே நேற்று இரவு மாநில கவர்னரிடம் வழங்கினார். இந்நிலையில், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டியதில்லை என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மராட்டிய சட்டசபை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னரின் உத்தரவு படி இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை. ஆகையால், இன்று நடைபெறவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படாது என மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.