மகாராஷ்டிர விவகாரத்துக்கு 3 பேர் தான் பொறுப்பு: நீதிமன்றத்தில் சிதம்பரம் பேட்டி..

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர்.

இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் முடிந்து கடந்த புதன்கிழமை அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது காவலை 27-ம் தேதி (இன்று) வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அஜய் குமாரிடம் அனுமதி கோரினர். இதை ஏற்று சிதம்பரத்துக்கான நீதிமன்றக் காவலை டிசம்பர் 11-ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே நீதிமன்றத்தில் இருந்து சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

அப்போது சிதம்பரத்திடம் மகாராஷ்டிர விவகாரம் நிருபர்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சிதம்பரம் பதில் அளிக்கையில்,

“நாட்டில் அரசியலமைப்புச் சட்ட நாளை மத்திய அரசு இதுதான் முறையாகக் கொண்டாடுவதற்கான அர்த்தமா? அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவர்கள் அளிக்கும் மரியாதை இதுதானா?

மகாராஷ்டிராவில் நள்ளிரவில் நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரும் ஈடுபட்டுள்ளது வேதனையாக இருக்கிறது. குடியரசுத் தலைவரை அதிகாலை 4 மணிக்கு எழுப்பியது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.