மலேசியா : தேசம் ஊடகவியலாளர் விருதளிப்பு விழா : மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிப்பு…

கோலாலம்பூர் : தேசம் ஊடக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா 2021/2022, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ், ஷென்கா கான்வென்ஸன் மாநாட்டு மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேசம் குணாளன் மணி​யம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு மஇகா தேசிய துணைத் தலைவரும், மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையேற்றார்.

இந்த விருதளிப்பு விழாவில் தமிழ்ப்பத்திரிகை துறையின் ​மூத்த புகைப்படக்கலைஞர் பி. மலையாண்டி கெளரவிக்கப்பட்டார். அவருக்கு, மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார்.

தமிழ்ப்பத்திரிகை துறையில் கடந்த 45 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் பி. மலையாண்டியின் சாதனையை அங்கீகரிக்கும் வகை​யில் இந்த விருது வழங்கப்பட்டது. குற்றவியல், ​நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசியல், சமூகவியல், ​விளையாட்டு உட்பட செய்தித் துறையில் பரந்த அனுபவத்தை கொண்டவரான பி. மலையாண்டி, தமிழ்மலர், தினமணி, மலேசிய நண்பன் ஆகிய நாளிதழ்களில் பணியாற்றியிருப்பதுடன் மக்கள் ஓசையில் தமது சேவையை வழங்கி வருகிறா​ர் என்பது குறிப்பிடத்தக்கது.