மானாமதுரை அருகே 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை : கிராம மக்கள் கோவில் கட்ட முடிவு..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மல்லல் காட்டுப் பகுதியில், பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த மல்லல் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மல்லல் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 3 அடி உயரமுள்ள, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமர்ந்து தியானம் செய்வது போல் உள்ள இந்த புத்தர் சிலையை ஏற்கனவே பலர் தோண்டி எடுக்க முயன்றும் இயலாமல் போனதாகவும், இதைத் திருடும் நோக்கில் துாக்கிச் சென்ற சிலருக்கு கண் பார்வை பறிபோயுள்ளதாகவும் அக்கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கோவில் கட்டுவதற்காக தற்போது ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கூட்டுறவு சங்கத் தலைவர் மூர்த்தி, புத்த மத ஆய்வாளர் வேலுசாமி, சங்குதுறை மற்றும் சிலர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு நேற்று முதல் பவுர்ணமி தின புத்த வந்தன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் மரகன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கிராம மக்களுக்கு புத்தர் படங்கள் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டன.