மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு

வரும் மே 25-ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு மாநிலங்கள் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.

இந்தநிலையில் மே 25-ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நாடு முழுவதும் மே 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும். முதற்கட்டமாக குறைவான எண்ணிக்கையில் விமான சேவைக்கு அனுமதிக்கப்படும்.

இதனால் அனைத்து விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.’’ என பதிவிட்டுள்ளார்