மோடி பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தை அழித்தார் காங்கிரஸ் சீரமைக்கும்: ராகுல் காந்தி பேட்டி..

பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார், நாங்கள் பொருளாதாரத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை வாக்குப்பதிவும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிடிஐ நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியின் ‘நியாயம்'(Nyay) திட்டம் இரு நோக்கங்களுக்காக கொண்டு வரப்படுகிறது, நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்தல்,

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், சீரழிந்துகிடக்கும் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல், ஆகிய இரு நோக்குகள் முன்வைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தனது மோசமான கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், கப்பார் சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டிவரி) ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் இருந்த அனைத்து பணத்தையும் கடந்த 5 ஆண்டுகளில் நீக்கிவிட்டார்.

குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் தேர்வு செய்துள்ள இந்த திட்டத்துக்கு ‘நியாயம்’ என்று ஏன் பெயர் வைத்தோம் தெரியுமா. கடந்த 5 ஆண்டுகளாக நரேந்திர மோடி,

ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு எதுவுமே திருப்பிச் செய்யவில்லை. அதற்கு நியாயம் கிடைக்கவே நியாயம் என்று பெயர் வைத்தோம்.

விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், வீட்டில் என் தாய், சகோதரிகள் சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த சிறுசேமிப்புகள் அனைத்தையும் மோடி பணமதிப்பு நீக்கம் மூலம் அபகரித்துக் கொண்டார். இவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டதை நாங்கள் திருப்பி அளிக்க முயற்சிக்கிறோம்

நிச்சயம் எங்களின் ‘நியாயம்’ திட்டம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும். தேசத்தில் வறுமை, ஏழ்மையின் மீது விழுந்த கடைசி தாக்குதலாக இருக்கும்.

இந்த திட்டம் முழுமையாக ஆலோசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைக்கு சாத்தியமாக என்று சோதிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி போல் சிந்திக்காமல் செயல்படுத்தமாட்டோம்.

பொருளாதார வல்லுநர்களிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நியாயம் திட்டத்துக்காகப் பெற்றோம். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் கோடி செலவாகும். இந்த திட்டத்தால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை எந்தவிதத்திலும் மோசமடையாது என்பதை கூறுகிறேன்.